சசிவேகலு கணேசா (கன்னடம்: ಸಸಿವೇಗಲು ಗಾನಾಶಾ) கோவில் ஹேமகூடா (கன்னடம்: ಹೇಮಕುತ) மலைக்குத் தெற்கே உள்ள மலைச்சரிவில் உள்ளது. சசிவேகலு கணேசா சிலை அமைந்துள்ள மண்டபத்திற்குச் சற்று வடக்கில் கடலேகளு கணேசா (கன்னடம்: ಕಡಲೇಕಲು ಗಾನಾಶಾ) என்ற மற்றொரு மாபெரும் கணேசா சிலை அமைந்துள்ளது. சசிவேகலு கணேசா மண்டபத்திற்குத் தெற்கில் விஷ்ணுபாதம் (கன்னடம்: ವಿಷ್ಣುಪದ) கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று நினைவுச் சின்னங்களும் நடந்து சென்று பார்க்கும் தொலைவிலேயே அமைந்துள்ளன. இந்த மூன்றையுமே 45 – 60 நிமிடங்களில் பார்த்து முடித்துவிடலாம். சசிவேகலு கணேசா மண்டபத்திற்கு எதிரில் இந்தியத் தொல்லியல் துறையினரால் நிறுவப்பட்ட ஹம்பி தள வரைபடத்தைக் காணலாம்.
சசிவேகலு கணேசா
சசிவேகலு கணேசா ஹம்பியில் ஹேமாகூடா மலையின் தென் கிழக்குச் சரிவில் அமைந்துள்ள உள்ள மாபெரும் ஒற்றைக்கல் சிலையாகும். ஹம்பியில் இச்சிலை முக்கியமான நினைவுச் சின்னமாகும். உள்ளூர் மக்கள் சசிவேகலு கணேசா என்று அழைக்கிறார்கள். சசிவேகலு என்றால் கடுகு விதை (mustard seed) என்று பொருள்.
இந்து மத நம்பிக்கைகளின்படி கணேசன் (கணபதி அல்லது விநாயகன் அல்லது பிள்ளையார்) அவருடைய வித்தியாசமான உணவுப் பழக்கங்களுக்குப் பேர்போனவர். ஒரு சமயம் வயிறு புடைக்க உண்டுவிட்டார். வயிறு புடைத்து வெடிக்கும் அளவிற்குப் போய் விட்டது. வயிறு வெடிப்பதைத் தடுப்பதற்காகக் கணேசர் ஓர் உபாயம் மேற்கொண்டார். ஒரு பாம்பைப் பிடித்துத் தன் வயிற்றைச் சுற்றிக் கட்டிக் கொண்டார்.
சசிவேகலு கணேசா ஒர் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 2.4 மீ. (8 அடி) ஆகும். கரண்டமகுடம் அணிந்து வலது முன்கரத்தில் ஒடிந்த தந்தம் பெற்றும், பின்கரத்தில் அங்குசம் ஏந்தியும், இடது பின்கையில் பாசக்கயிறு ஏந்தியும், சசிவேகலு கணேசா காட்சியளிக்கின்றார். இடது முன்கையில் மோதகத்தை ஏந்திய இவர் கை ஒடிந்துள்ளது. கண்டிகை, சரப்பளி அணிந்து மகாராச லீலாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். சிலையின் வயிற்றைச் சுற்றி பாம்பின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

14th century Sasivekalu Ganesha PC: Wikimedia Commons
இந்தச் சிலையைச் சுற்றி திறந்த மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மண்டபத்தின் தாங்குதளம் வெறுமையாகவுள்ளது. பதினாறுகால் மண்டபத்தை பதினாறு நான்முகத் தூண்கள் தங்குகின்றன. இவற்றின் மேல் போதிகை, உத்தரம் பகுதிகளும் நேர்த்தியுடன் காணப்படுகின்றன.
இதன் அருகில் காணப்படும் கல்வெட்டு ஒன்று இந்தத் திறந்த மண்டபத்தைச் சந்திரகிரியைச் (தற்போது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அருகே அமைந்துள்ளது) சேர்ந்த வணிகர் ஒருவர் கி.பி. 1506 ஆம் ஆண்டுக் கட்டியுள்ளதாகப் பதிவு செய்துள்ளது. இம்மண்டபம் விஜயநகர மன்னர் இரண்டாம் நரசிம்மர் (கி.பி. 1491-1505) நினைவாகக் கட்டப்பட்டுள்ளதாக இக்கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது.
சுற்றுலாத் தகவல்
சசிவேகலு கணேசா கோவில் திறந்திருக்கும் நேரம்: வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
நுழைவுக் கட்டணம்: இல்லை
புகைப்படம் எடுக்க அனுமதி: உண்டு
கண்டு களிக்கத் தேவைப்படும் நேரம்: ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்.
இங்கு செல்ல சிறந்த பருவம்: அக்டோபர் மாதம் முதல் ஃபிப்ரவரி மாதம் வரை.
கடலேகளு கணேசா
மிகப்பெரிய ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்ட கடலேகளு கணேசா சிலை ஹேமாகூடா மலையின் வடகிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இந்தக் கணேசா சிலையின் வயிறு கொண்டைக்கடலை (கன்னடம்: கடலேகளு (ಕಡಲೇಕಲು) ; ஆங்கிலம்: Bengal gram) வடிவத்திலேயே அமைந்துள்ளபடியால் உள்ளூர் மக்கள் இந்தச் சிலையை “கடலேகளு கணேசா” என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். கணேசா சிலையின் உயரம் 4.5 மீ. (15 அடி) ஆகும். இது ஹம்பியின் மிகப் பெரிய சிலைகளில் ஒன்றாகும்.

15th century Kadalekalu Ganesha statue, Wikimedia Commons
கடலேகளு கணேசா கோவில் கருவறை மற்றும் மண்டபம் ஆகிய இரு அங்கங்களுடன் அமைந்துள்ளது. செவ்வக வடிவக் கருவறை விமானம் தாங்குதளம், பாதம், பிரஸ்தாரம் கூரை ஆகிய மூன்று அங்கங்களைப் பெற்றுள்ளன. மண்டபத்தை அடைய ஐந்து படிகளைக் கடந்து செல்லவேண்டும். சிகரம், கிரீவம், ஸ்தூபி ஆகிய அங்கங்கள் இதில் இடம்பெறவில்லை. கருவறை முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை நன்கு அலங்கரிக்கப்பட்ட தூண்கள் சதுரம் கட்டு சதுரம் என்று அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. நான்முகத் தூண்களுக்குமேல் போதிகை நன்கு வளைந்து சற்றுப் பருத்த பூமுனையோடு காணப்படுகிறது. இந்த மண்டபத்திலிருந்து ஹம்பி பஜார், மாதங்கா மலை அடிவாரம் போன்ற இடங்களைக் காணலாம்.

15th century Kadalekalu Ganesha Temple, Wikimedia Commons
சுற்றுலாத் தகவல்
கடலேகளு கணேசா கோவில் திறந்திருக்கும் நேரம்: வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
நுழைவுக் கட்டணம்: இல்லை
புகைப்படம் எடுக்க அனுமதி: உண்டு
கண்டு களிக்கத் தேவைப்படும் நேரம்: ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்.
இங்கு செல்லச் சிறந்த பருவம்: அக்டோபர் மாதம் முதல் ஃபிப்ரவரி மாதம் வரை.
விஷ்ணு பாதம் கோவில்
இக்கோவில் ஆரம்பகால விஜயநகரக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த இந்தச் சிறிய கோவிலின் அமைப்பில் ஒரு சிறிய கருவறையும் ஒரு திறந்த நிலை மண்டபமும் இடம்பெற்றுள்ளன. இக்கோவில் தாங்குதளம், பாதம் மற்றும் கூரை ஆகிய அங்கங்களைப் பெற்றுள்ளன. கருவறையின் மேலே கண்டம், சிகரம், ஸ்தூபி ஆகிய அங்கங்கள் இடம்பெறவில்லை. மண்டபத்தின் முகப்பில் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேல் இரண்டு விரிகோணப் போதிகைகள் உத்தரம் தாங்குகின்றன. கோவிலின் வெறுமையான வெளிச் சுவர்களைச் சுற்றிச் சாய்வான கோணத்தில் சிறு தாழ்வாரம் (angled eave) அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறிய கோவிலின் கருவறையின் பாறைத் தரையில் ஒரு ஜோடி பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில். இந்தப் பாதங்களைச் சுற்றி ஒரு நாகம் வளைத்துள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் பாதங்களைச் சுற்றிச் செதுக்கப்பட்டுள்ள நாகத்தின் புடைப்புச் சிற்பமே இந்தக் கோவில் ஒரு வைணவக் கோவில் என்று நிறுவுவதற்கான சான்றாகும். இதன் அடிப்படையிலேயே இப்பாதங்கள் விஷ்ணுவின் பாதங்களே என்று கருதப்படுகின்றது.
கருவறை நுழைவாயில் கதவின் நிலையிலும் கருவறையின் தென்புறத்து வெளிச்சுவரிலும் பாம்பின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை அடுத்து இடப்புறம் சசிவேகளு கணேஷா கோவில் அமைந்துள்ளது.
ஹம்பி பஜாரிலிருந்து ஹம்பி-கமலாபுரா சாலையில் 400 – 500 மீ. பயணித்தால் விஷ்ணுபாதம் கோவிலை அடையலாம்.
சுற்றுலாத் தகவல்
விஷ்ணுபாதம் கோவில் திறந்திருக்கும் நேரம்: வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
நுழைவுக் கட்டணம்: இல்லை
புகைப்படம் எடுக்க அனுமதி: உண்டு
கண்டு களிக்கத் தேவைப்படும் நேரம்: ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்.
இங்கு செல்லச் சிறந்த பருவம்: அக்டோபர் மாதம் முதல் ஃபிப்ரவரி மாதம் வரை.
குறிப்புநூற்பட்டி
- Kadalekalu Ganesha. Hampi.in
- Kadalekalu Ganesha Temple, Hampi: A Unique Monument in Stone Karnataka.com
- Sasivekalu Ganesha. Hampi.in
- Sasivekalu Ganesha Temple in Hampi. by Madur. April 24, karnataka.com
- Vishnupada Temple http://www.asihampiminicircle.in/vishnupada-temple/#
- Vishnupada Temple Hampi.com http://hampi360.com/20vishnupada.html
பிங்குபாக்: ஹம்பி சசிவேகலு, கடலேகளு கணேசா மற்றும் விஷ்ணுபாதம் கோவில்கள் – TamilBlogs
படங்களும் பகிர்வும் அருமை ஐயா
அறியாத் தகவல்களை அள்ளித் தருகிறீர்கள்
நன்றி
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா.
LikeLike
விரிவான தகவல்கள் குறிப்பெடுத்துக்கொண்டேன் நன்றி நண்பரே…
LikeLike
சுவையான, விளக்கமான தகவல்கள். விஷ்ணு பாதம் பற்றி இன்னும் சிறுது எழுதலாமோ ? கயாவில் உள்ள விஷ்ணு பாதத்திற்கும் இதற்கும் உள்ள சம்பந்தம், ஒற்றுமை, வேற்றுமை பற்றி விவாதிக்கலாம். படங்களும் அருமை. நன்றி
LikeLike