பூதநாதா கோவில்களின் தொகுதி (Bhutanatha group of temples) கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் (Badami) உள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும். பூதநாதா கோவில்களின் தொகுதி அகஸ்தியர் (ஏரி) தீர்த்தக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அகஸ்தியர் தீர்த்த குளத்திற்கு (Agasthiya Theertha Tank) கிழக்கில் மல்லிகார்ஜுனா கோவிலும் குளத்திற்கு வடகிழக்கில் பூதநாதா கோவிலும் அமைந்துள்ளன. பாதாமியில், வாதாபி சாளுக்கியர்களின் கட்டிடக்கலை நம்மை வசீகரிக்கிறது. வாதாபி சாளுக்கியர்களும் மற்றும் கல்யாணி சாளுக்கியர்களும் விட்டுச் சென்ற கட்டிடக்கலை மரபு, இவர்கள் காலத்திய கோவில் கட்டிடக்கலை பற்றிய மகத்தான திறமை மற்றும் கட்டற்ற ஆர்வம் ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன. பரந்து விரிந்த இந்தப் பாரம்பரிய வளாகம் பல சுவாரஸ்யமான தலைசிறந்த படைப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தப் பூதநாதா கோவில் தொகுப்பு, கர்நாடகா மாநிலம், பகால்கோடு மாவட்டம், பாதாமி வட்டம், பாதாமி (Badami) (Kannada (ಬಾದಾಮಿ) பின் கோடு 587201 என்னும் ஊரில் அமைந்துள்ளது. பாதாமி பாகல்கோட்டிற்குத் தெற்கே 34 கி.மீ. தொலைவிலும்; ஐஹொளேயிலிருந்து 24 கிமீ. தொலைவிலும்; பட்டாடக்கல்லிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும்; மஹாகூடாவிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும்; தார்வாரிலிருந்து 89 கி.மீ. தொலைவிலும்; ஹோஸ்பேட்டிலிருந்து 102 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவிலிருந்து 385 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 15°55′12″N அட்சரேகை (லாட்டிட்யூட்) மற்றும் 75°40′49″E தீர்க்கரேகை (லாங்கிட்யூட்). கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 586 மீட்டர் (1923 அடி) ஆகும். இந்த நகரம் 4.23 கி.மீ பரப்பளவுடையது. 1921 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 25851 ஆகும்.
பாதாமிக்கு, வாதாபி (Vathapi) என்ற பெயர் இருப்பதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த நகரம் வாதாபி என்னும் பெயரில், கி.பி. 540 முதல் 757 ஆம் ஆண்டு வரை பாதாமி சாளுக்கியர்களின் தலைநகராக விளங்கியது. முதலாம் நரசிம்ம பல்லவன் (கி.பி 630 – 668) சாளுக்கிய தலைநகரான வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாகக் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. பாதாமி சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே வாதாபியில் கி.பி. 642 ஆம் ஆண்டு நடைபெற்ற உக்கிரமான “வாதபிப் போரில்” சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு வாதாபி நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு முதலாம் நரசிம்ம பல்லவன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.
பூதநாதா கோவில்களின் தொகுதி
பூதநாதா கோவில்களின் தொகுதியில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில கோவில்கள் உள்ளன. இவை மணற்கற்களால் (sandstone) கட்டப்பட்டவையாகும். அகஸ்தியர் தீர்த்த குளத்திற்கு வடகிழக்கில் பூதநாதா கோவிலையும், குளத்திற்குக் கிழக்கில் மல்லிகார்ஜுனா கோவிலையும் காணலாம்.
பூதநாதா கோவில்
தொடக்கத்தில் பூதநாதா கோவில் தொகுதி சமணர்களின் செல்வாக்கின் கீழிருந்ததது. பின்னர் இந்தக் கோவில் தொகுதி இலிங்காயத்துகள் கட்டுப்பாட்டில் வந்தது. இலிங்காயத்துகள் இக்கோவிலின் கருவறையில் சிவலிங்கத்தையும் எதிரே நந்தியையும் நிறுவினார்.
கட்டடக்கலை
வாதாபி சாளுக்கியர்களின் (Chalukyas of Vatapi) ஆட்சி காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. மேலைச் சாளுக்கியர்கள் கட்டடக்கலையை இக்கோவிலின் கருவறையும் மற்றும் அர்த்தமண்டபமும் பிரதிபலிக்கின்றன. மேற்கு கல்யாணி சாளுக்கியர்களின் ஆட்சி காலமான கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் மகாமண்டபம் கட்டி இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இக்கோவில் தென்னிந்திய திராவிடக் கட்டிடக்கலை பாணியையும் வட இந்திய கட்டடக்கலை பாணியையும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. என்றாலும் தொடக்க காலத் தென்னிந்தியாவின் கட்டமைப்புக் கோவில் கட்டடக்கலைக்கு (Architecture of the Structural temples in South India) உதாரணமாகப் பூதநாதா கோவில்களின் தொகுதியைக் குறிப்பிடலாம். இந்தக் கோவிலில் வெறுமையான சுவர்கள் (plain walls), மகாமண்டபத்தில் சாய்வான கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள இறவானம் (angled eaves), பிரமீடு வடிவத்தில் அமைந்த ஃபம்ஸான பாணி சிகரம் (pyramidal phamsana shikara) போன்ற பிற்காலச் சாளுக்கிய கட்டிடக்கலை அம்சங்களைக் காணலாம். அர்த்தமண்டபத்தில் உள்ள பெருத்த தூண்கள் மற்றும் அங்கணம் ஆகிய உறுப்புகள் தாமரை வடிவங்களால் (lotus motif) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கருவறையின் நுழைவாயிலின் ஒரு புறம் உள்ள கோட்டத்தில் பெண்தெய்வமான கங்கை நின்ற கோலத்தில் மகர வாகனத்தில் ஊர்ந்தபடி உள்ளார். நுழைவாயிலின் மற்றோரு புறத்தில் பெண்தெய்வமான யமுனை கடக வாகனத்தில் ஊர்ந்தபடி காணப்படுகிறார். இந்தக் கோவில் தொகுதி புகழ்பெற்ற பாதாமி குடைவரைக் கோவில்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

Bhutanatha group of temples facing the Agasythya Tank Wikimedia Commons

Bhutanatha Temple Group. Badami, late 7th century & 11th century PC: Wikimedia Commons
மல்லிகார்ஜுனா கோவில்
பூதநாத கோவில்களின் தொகுதியில் ஒன்றான இந்த மல்லிகார்ஜுனா கோவில் இந்தத் தொகுதியில் அமைந்த மற்றோரு முக்கியமான கோவிலாகும். அகஸ்திய ஏரியின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்தக்கோயில் சாளுக்கிய கட்டிடக்கலை பாணியின் முக்கிய அம்சமான அடித்தளப் பீட அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவில் சிவனுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் விமானத்தின் பிரமிடு வடிவ ஃபம்ஸான சிகரம், வேலைப்பாட்டுடன் கூடிய கல் உத்தரங்களைத் தாங்கும் தூண்கள், நேர்த்தியான கைபிடிச் சுவர்களைக் கொண்ட திறந்த மண்டபம் போன்றவை காணப்படுகின்றன. இந்த கோவில் மண்டபத்தின் முழுத் தூண்கள் சதுரம், பல்கோணபட்டையுடன் கூடிய உருளை வடிவக் கட்டு, சதுரம், வைர வடிவ தலைப்பு போன்ற அமைப்புகளோடு உத்திரம் தாங்குகின்றன.பாதாமிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மல்லிகார்ஜுனா கோயிலுக்குத் தவறாமல் வருகை புரிகிறார்கள்.

Mallikarjuna Temple, Badami PC: Wikimedia Commons

Mallikarjuna Temple Group. Badami, 11th century PC: Wikimedia Commons

Mallikarjuna Group. Badami, 11th century PC: Wikimedia Commons

Mallikarjuna Temple, Badami PC: Trawell

Columns of the Linga Shrine (Entrance) PC: Wikimedia Commons
கர்நாடக அரசுப்பேருந்துகள் பீஜாப்பூர் மற்றும் ஹூப்ளி நகரத்திலிருந்து அதிக அளவில் பேருந்துகளை பாதாமிக்கு இயக்குகின்றன. இது தவிர, தனியார் பேருந்துகளும் சுற்றுலா நிறுவனங்களும் பெங்களூரிலிருந்து பாதாமிக்கு தினசரி பேருந்துச் சேவைகளை அளிக்கின்றன.
குரிப்புநூற்பட்டி
- பூதநாத கோயில், பாதாமி Native Planet https://tamil.nativeplanet.com/badami/attractions/bhutanatha-temple/
- மல்லிகார்ஜுனா கோயில், பாதாமி Native Planet https://tamil.nativeplanet.com/badami/attractions/mallikarjuna-temple//
- Mallikarjuna Temple Group http://www.art-and-archaeology.com/india/badami/mal01.html
- Bhutanatha Group of Temples Raggi Mudde March 30, 2017, https://www.karnataka.com/badami/bhutanatha-group-of-temples/
படங்களும் பதிவும் வியப்பினை ஏற்படுத்துகின்றன ஐயா
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா.
LikeLike
பிங்குபாக்: பாதாமி: பூதநாதா கோவில், மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் அகஸ்தியர் தீர்த்தக்குளம் – TamilBlogs
வழக்கம்போல் விரிவான பிரமிப்பான தகவல்கள் நன்றி நண்பரே
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
LikeLike
வணக்கம் சகோதரரே
விளக்கமான விரிவான தகவல்களுடன் பூதநாத கோவில், மல்லிகார்ஜுனா கோவில்களின் அமைப்பை பற்றியும் சிறப்பை பற்றியும் சொல்லியிருப்பது கோவில்களை தரிசனம் செய்த திருப்தியை தந்தது. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது. கோவில்களுக்குசெல்லும் வழிகளையும் தூரங்களையும் குறிப்பிட்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
LikeLike
தங்கள் வருகைக்கும் விரிவான கருத்திற்கும் நன்றி சகோதரி. மேலைச் சாளுக்கியர்களின் வரலாற்றுச் சின்னங்கள் பற்றி மேலும் சில பதிவுகள் தரலாம் என்றிருக்கிறேன். தொடர்ந்து கருத்துகளைப் பதிந்து ஆதரவு நல்குங்கள். நன்றி.
LikeLike
தென்னிந்தியாவின் கட்டிடக்கலை பாணியும், வட இந்தியாவின் கட்டிடகலை பாணியும் கலந்த பாதாமி கோவில்களின் விவரணம் மநோஹரமாய் இருக்கிறது…
பல காலகட்டங்களாக அமைக்கப்பட்ட இந்த கோவிலின் ஐதிஹியவும் தெரிஞ்சால் நல்லாயிருக்கும்…வாழ்த்துக்கள் சார்!!
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரி. மேலைச் சாளுக்கியர்களின் கட்டக்கலையில் உருவானது தான் இந்தப் பாதாமி, ஐஹோளே மற்றும் பட்டாடக்கல் வரலாற்றுச் சின்னங்கள். பூதநாதா கோவில்களின் தொகுப்பு திராவிடக் கட்டடக் கலைப் பாணியையும் நாகரா கட்டடக் கலைப் பாணியையும் ஒருங்கிணைத்து உருவானது. இங்கு வழிபாடில்லை. ஐஹோளே பற்றி சில பதிவுகள் இங்கு உள்ளன. பார்க்கவும். மேலும் சில பதிவுகளைத் தரலாம் என்றிருக்கிறேன். மகாகூடா நகரமும் இது போன்ற வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றாகப் பதிவு செய்கிறேன். மேலான ஆதரவும் கருத்தும் நல்க வேண்டுகிறேன். நன்றி.
LikeLike
உங்கள் தெளிவான விளக்கத்திற்க்கு மிக நன்றி சகோதரா..மேலும் இது போன்ற நல்ல பதிர்வுபள் எதிர் பார்க்கிறேன்.
LikeLike
படங்களுடன் கோவில் தரிசனம் அருமை
பயனுள்ள பதிவு
தொடருங்கள்
LikeLike
பிங்குபாக்: பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு | அகரம்
பிங்குபாக்: பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு – TamilBlogs